நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Thursday 29 September 2011

போதி தர்மரும் 'ஏழாம் அறிவு' சூர்யாவும்




சூர்யாவின் முப்பரிமாண நடிப்பில் விரைவில் வெளி வரும் 'ஏழாம் அறிவு’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் போதி தர்மர் என்ற யோகியின் கதாபாத்திரம். அந்த போதி தர்மர் கதாபாத்திரம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு காஞ்சிபுரத்தில் பிறந்த ஒரு தமிழனுடைய வரலாற்றைச் சொல்கிறது. அவரின் சரித்திரத்தைக் கொஞ்சம் பார்ப்போமா..


போதி தருமன் - 1887ஆம் ஆண்டு யோஷிடோஷி என்ற கலைஞரால் வரையப்பட்ட ஒரு படம்




காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ மன்னனான 4ம் கந்தவர்மன்-க்கு மூன்றாவதாகப் பிறந்த குழந்தைதான் போதிதர்மர். இவரின் இயற்பெயர் புத்த வர்மன்(பௌத்தவர்மப் பல்லவன்).  கந்தவர்மன் 4-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்:
4ம் கந்தவர்மன் , மகனின் குருகுல வாழ்க்கைக்காக பிரஜ் என்கிற சமய குருவிடம் சேர்த்திருக்கிறார் . இவர் காஞ்சியில் தங்கி பௌத்த சிந்தனைகளைப் பரப்பி வந்தவர். சிறுவன் போதியின்  அபார ஞானத்தைப் பார்த்து பிரமித்த பிரஜ், தனக்கு அடுத்த வாரிசாக 28வது குருவாக போதியை  நியமிக்கிறார். காலப்போக்கில் போதி தர்மர் காஞ்சிபுரத்திலிருந்தபடியே பல கலைகளைக் கற்றுத் தேர்கிறார்.  இதில் களறி, வர்மம் போன்ற அதிரடிக் கலைகளும் உண்டு. காஞ்சியிலிருந்து நாலந்தா சென்று அங்கிருந்து கி.பி.526-ல் தெற்கு சீனாவிற்குச் செல்கிறார் போதி தர்மர்.போதிதர்மாவின் காலம்  கி.பி.475-550 என்று பதிவுகள் கூறுகின்றன.


1. நந்திவர்மன் 1
2. குமாரவிஷ்ணு 2
3. புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)


அக்காலத்தில் பல்லவ வம்சத்தில் பிறந்த கடைசிக் குழந்தையை புத்த மதத்திற்கு அர்ப்பணிப்பது மரபு. எனவே  4ம் பல்லவ மன்னன் 


அன்றைய சீனப் பேரரசராக இருந்தவர் "லியாங் வு டீ".புத்த மதத்தில் கொண்ட ஈடுபாட்டால் பௌத்த  ஆலயங்களையும் விகாரங்களையும் நிறுவிய சீனப் பேரரசர். தமிழகத்திலிருந்து வந்த புத்தத் துறவியான  போதி தர்மரை கேள்விப்பட்டு மிகுந்த மரியாதையோடும், அன்போடும் உபசரித்து சீனாவில் தங்கிவிட  வேண்டுகிறார். அங்கு ஷாஓலின் என்ற இடத்தில் தங்கி பௌத்த மதத்தைப் பரப்பிய போதி தர்மர், தமிழகத்தில் தான் கற்ற கலைகளையும் சீனர்களுக்குப் பயிற்றுவித்தார். அப்படி போதிதர்மர் கற்றுக் கொடுத்த கலைகளில் ஒன்றுதான் குங்ஃபூ.





போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிக்குகள் பிச்சை எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக்கொண்டு பயந்தே வாழ்ந்திருந்தார்கள். ஆனால் போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியின் சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார். அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின் செயல்பாட்டையும் அடக்கமுடியும். இன்னொரு பயிற்சியின்மூலம் உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச் செயல்படுத்த முடியும். உடற்பயிற்சிகளையும் சொல்லிக்கொடுத்தார். அத்துடன் அரிய நுட்பக்கலையான வர்ம சாஸ்திரத்தையும் சொல்லிக்கொடுத்தார்.


அவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச் செய்யச் சொல்லிக் கொடுத்தார். தங்களது கோயில்களைச் சுற்றிலும் தங்களுக்குத் தேவையான உணவை அவர்களே விளைவித்துக்கொண்டார்கள். சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை. உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில தற்காப்பு முறைகளையும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில் காயம் ஏற்படா முறைகளையும் கற்றுக்கொடுத்தார். பிற்காலத்தில் புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின் பலன்களையெல்லாம் பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு சீனச்சக்கரவர்த்திகள் சிலர், பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது போதிதர்மரின் சீடபரம்பரையும் கோயில்களும் மட்டும் தப்பின.


அவ்வாறு போதிதர்மர் தோற்றுவித்த பௌத்தக்கோயில்களை ஷாஓலின்(Shaolin) கோயில்கள் என்பார்கள்.





போதி தர்மர் வாழ்ந்த இடத்தை சீனாவில் "ஷாஓலின் கோயில்" என்று இன்றைக்கும் வணங்கி வருகிறார்கள்.  அந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டில் ‘தென் இந்தியாவிலிருந்து வந்த போதி தர்மர் கற்றுத் தந்த கலை  குங்ஃபூ’ என்று குறிக்கப்பட்டுள்ளது. அவரை சீன மக்கள் "போ-ட்டி-தாமா" என்றுதான் செல்லமாக அழைக்கின்றனர்.

சீனாவில் எங்கு திரும்பினாலும் போதி தர்மரின் சிலை இருக்கிறது. அங்கிருக்கிற சிறுவர் சிறுமிகள் கூட அவரை வணங்குகிறார்கள். ஒரு நாட்டின் பாதியை தன்னுடைய செல்வாக்கால் நிறைத்திருக்கும், சீனாவில் தெய்வமாக மதிக்கப்படும் ஒரு தமிழர் போதி தர்மர்.ஆனால் அவருக்கு சென்னைக்கு அருகிலிருக்கும் காஞ்சிபுரத்தில் ஒரு சிறிய சிலை மட்டுமே உள்ளதாம். மற்றபடி அவரைப்பற்றிய எந்த தகவலும் இங்கிருப்பவர்களுக்கு தெரியாது. அந்த அளவுக்கு ஒரு தமிழனின் வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது என்பது கவலைக்குரிய விசயம்.

குங்ஃபு கலையை சீனாவிற்கு அறிமுகப்படுத்தியது ஒரு தமிழன் என்ற விசயம் நிச்சயம் பெருமையான விசயம்.  போதி தர்மர் வளர்த்த கலையை இன்றும் சீனாவில் தலைமுறை தலைமுறையாக கற்று வருகின்றனர்.

இந்த ஆதாரத்துடன் ஏழாம் அறிவு படத்தை மிரட்டலாக எடுத்திருக்கின்றனர்.

இந்த பதிவுடன் போதி தர்மர் கற்றுக் கொடுத்த குங்ஃபூ கலையின் முழு நீள டாக்குமெண்டரி வீடியோவை வெளியிட்டுள்ளேன். இதில் வரும் ஆக்சன் காட்சிகளைக் காணும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.


நம்ம சூர்யா வீடியோவில் வருவதைப் போல சண்டை போடுவாரா?. அப்ப படம் நிச்சயம் சூப்பராக இருக்கும். மேலும் எந்தக் கேரக்டரைக் கொடுத்தாலும் அதில் பர்பெக்ஷ்னாக நடிப்பவர் சூர்யா. இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் அவரின் ஆக்சன் காட்சிகளைக் காண மிகுந்த ஆவலாக இருக்கிறது. பார்க்கலாம் எப்படி நடித்திருக்கிறார் என்று.

Wednesday 28 September 2011

செயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் - திரு நள்ளாறு சனி பகவான்


இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு...என்று பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.




சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள்
ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது.எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது.

கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.



எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு- ஸ்ரீதர்ப்பணேசவரர்   கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா விலிருந்து  பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.

இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன. 

Tuesday 27 September 2011

பாதச்சுவடுகள்


அது ஒரு அற்புதமான கனவு....
தன்னந்தனியனாய் அக் கடற்கரை மணலில்
வெகுதூரம் நடந்த பின் திரும்பிப் பார்த்தேன்.
எனது பாதச் சுவடுகள் மிக நீண்ட பாதை போட்டிருந்தன.
ஜனன காலத்திலிருந்து நான் நடந்து வந்த பாதையது.
எனது வாழ்க்கைச் சரிதம் அங்கம் விடாமல்
மௌனக் காட்சியாய் அம்மணலில் தெரிந்தது.
ஓ! இதென்ன?
எனது பாதச் சுவடுகளின் அருகில்
யாருடையவை இம்மற்றொரு ஜோடிசுவடுகள்?
உடனே எனக்குப் புரிந்தும் போயிற்று!


புல்லரித்தது.... எனது கடவுளின் சுவடுகள் அவை!
என்னோடு இப்பயணத்தில் என் தெய்வமுமா
உடன் வந்திருக்கிறது? நான் பாக்கியசாலி தான்.
ஆனால், ஆனால்..... நடுநடுவே ஏன் ஒரு ஜோடி மட்டும்?
அதுவும் என் வாழ்க்கையின் மிகவும்
சோதனையான காலங்களின் போது....
எனக்கு ஏமாற்றம் தாங்கவில்லை.
"கடவுளே என் இன்ப காலத்தில் உடன் வந்து கொண்டிருந்தீர்கள், துன்ப காலத்தில் என்னைக் கைவிட்டுக் காணாமல் போய் விட்டீர்களே இது நியாயமா?" இவ்வளவு தான் உன் கருணையா?
உன்னுதவிக்காக நான் கெஞ்சிக் கரைந்த போது
கை விட்டு விட்டாயே என்னை
கூக்குரலிட்டேன் நான்,
அசரிரீயாக பதில் கேட்டது-
அந்த ஒற்றை ஜோடிச் சுவடுகள்
உன்னுடையவை அல்ல ... என்னுடையவை.
நடக்கவியலாத உன்னை நான்
சுமந்து வந்த சுவடுகள்!.

Monday 26 September 2011

விடாமுயற்சி...........


படுத்த படுக்கையாகக் கிடந்த அந்த மனிதருக்குப் பேசவோ, நடக்கவோ முடியாது. உடலில் ஒரு விரலைத் தவிர வேறெந்த பாகத்தையும் அசைக்க முடியாது. அந்த நிலையில் இருக்கும் மற்ற எவருமே மரணம் சீக்கிரமாக தன்னிடம் கருணை காட்டாதா என்று ஏங்குவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாது. ஆனால் வாஷிங்டன் ரோப்ளிங் (Washington Roebling) என்ற அந்த மனிதரின் உடலைத் தான் விதியால் தொட முடிந்ததே தவிர அவருடைய கனவையும், மன உறுதியையும் அந்த ஒரு பரிதாப நிலையிலும் தொட முடியவில்லை. இத்தனைக்கும் அவர் தன் கனவை நிறைவேற்றும் முயற்சியில் தன் தந்தையை இழந்திருந்தார். தன் உடல் இயக்கத்தையும் இழந்திருந்தார். ஆனால் அவரால் தன் கனவை இழக்க முடியவில்லை.


அந்தக் கனவை அவரும் அவர் தந்தையும் சேர்ந்து கண்டிருந்தார்கள். நியூயார்க் நகரத்தில் மன்ஹட்டன் பகுதியையும், லாங் ஐலேண்ட் ப்ரூக்ளின் பகுதியையும் இணைக்க கிழக்கு நதியின் குறுக்கே 5989 அடி நீளமுள்ள தொங்குபாலம் கட்ட இருவரும் எண்ணியிருந்தார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் (1870 ஆம் ஆண்டில்) அது போன்ற பாலம் சாத்தியமே அல்ல என்று வல்லுனர்கள் கருதினார்கள். வாஷிங்டன் ரோப்ளிங்கும், அவர் தந்தை ஜான் ரோப்ளிங்கும் இருவருமே இஞ்சீனியர்கள். அவர்கள் சாத்தியம் என்று நம்பினார்கள். அந்தப் பாலம் கட்டும் பணியைத் தொடங்கவும் செய்தார்கள்.

பாலம் கட்டும் பணியைத் தொடங்கிய சில மாதங்களிலேயே கட்டுமானப் பணி நடந்த இடத்திலேயே ஒரு விபத்தில் தந்தை ஜான் ரோப்ளிங்க் இறந்து போனார். அந்தப் பணியைத் தொடர்ந்த மகன் வாஷிங்டன் ரோப்ளிங்கும் ஒரு விபத்தில் அடிபட்டு மூளையின் சில பாகங்கள் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். எல்லோரும் அந்தப் பாலம் முட்டாள்தனமான முயற்சி என்றும், ராசியுமில்லாதவை என்றும், அந்த விபத்துகள் அதற்கான ஆதாரம் என்றும் விமரிசித்தார்கள்.

சிகிச்சைக்குப் பின் வாஷிங்டன் ரோப்ளினுக்கு அசையும் ஒரு விரலும், அசையாத மனமும் மட்டுமே எஞ்சி இருந்தன. அவர் அந்த பரிதாப நிலையிலும் உள்ளதை வைத்து முடிந்ததைச் செய்ய எண்ணினார். சில நாட்களில் மனைவி எமிலியுடன் விரலாலேயே தன் கருத்துகளைத் தெரிவிக்கும் ஒரு முறையை உருவாக்கிக் கொண்டு பாலம் கட்டும் எஞ்சீனியர்களை வரவழைக்கச் சொன்னார். அவர்களும் வந்தனர். மனைவி மூலம் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு விளக்கினார்.

மீண்டும் பாலம் கட்டும் பணி ஆரம்பித்தது. கணவருக்காக எமிலி தானும் கணிதம், கட்டிடக் கலை ஆகியவற்றைக் கற்று அந்தப் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அவர் மேற்பார்வையில் 11 ஆண்டுகளில் அந்தப் பாலம் நிறைவு பெற்றது. வாஷிங்டன் ரோப்ளினின் அந்தக் கனவு 1883ல் ப்ரூக்ளின் பாலம் என்ற பெயரில் நனவாகி வரலாற்றுச் சின்னமானது. அந்தப் பாலத்தைத் திறந்து வைத்த அமெரிக்க ஜனாதிபதி முதல் வேலையாக வாஷிங்டன் ரோப்ளினின் வீட்டுக்குச் சென்று அவருடைய கைகளைக் குலுக்கி பாராட்டு தெரிவித்தார்.

இதற்குப் பெயரல்லவோ விடாமுயற்சி. ஒரு சாதாரண மனிதன் தன் முயற்சியை முடியாது என்ற வல்லுனர்களின் கருத்திலேயே நிறுத்தியிருப்பான். சற்று மன உறுதி படைத்த மனிதனோ தந்தையின் மரணத்தில் அந்த நம்பிக்கையை இழந்திருப்பான். மேலும் அதிக மன உறுதி படைத்தவன் தனக்கும் விபத்து ஏற்பட்டவுடன் அந்த வேலையையே விட்டொழித்திருப்பான். ஆரம்பத்திலிருந்தே அபசகுனங்கள் வந்தும் நாம் முயற்சி செய்தது மகா முட்டாள்தனம் என்று நினைத்திருப்பான்.

முடக்க நிலையில் படுக்க நேர்ந்தாலோ எத்தனை மன உறுதியும் உபயோகப்பட்டிருக்கவே வாய்ப்பில்லை. மரணம் மட்டுமே எதிர்பார்க்கத்தக்க பெரிய விடுதலையாக நினைக்கத் தோன்றியிருக்கும். ஆனால் இதெல்லாம் சாதாரண மனிதர்களைப் பொறுத்த வரை நடக்கக் கூடிய நிகழ்வுகள். மாமனிதர்களோ விதிகளை உருவாக்குபவர்கள். பொதுவான விதிக்கு அடங்குபவர்கள் அல்லர்.



மனதிற்குள் ஒன்று சரியெனப்படுகையில், தலைக்கனமோ, முட்டாள்தனமோ துளியும் இல்லாமல் ஒன்றை முடியும் என உணர்கையில், உலகமே முடியாது என்று மறுத்தாலும், விதி தன் முழு சக்தியையும் பிரயோகித்து முடங்கிக் கிடக்க வைத்தாலும் மாமனிதன் நினைத்ததை நடத்தியே முடிக்கிறான். சுற்றிலும் இருள் சூழ்ந்த போதிலும் தன் ஆத்மவிளக்கால் போகும் வழியைக் காண்கிறான். தன் ஆத்மபலத்தால் இலக்கைச் சென்றடைகிறான்.

நண்பர்களே, தொடங்கிய நல்ல காரியங்களுக்குத் தடங்கல் வரும் போதெல்லாம் செயலற்று நின்று விடாதீர்கள். வாஷிங்டன் ரோப்ளினை நினைத்துப் பாருங்கள். அவர் கண்டது எத்தனை தடங்கல்கள், எத்தனை துன்பங்கள். கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத மோசமான சூழ்நிலைகள் சூழ்ந்த போதும் மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் அவர் அவற்றிலிருந்து விடுபட்டு செயல்படவில்லையா? கடைசியில் மிஞ்சியது ஒரு கனவும், ஒரு விரலும் மட்டுமே என்றாலும் அவர் அதை வைத்துக் கொண்டே சரித்திரம் படைக்கவில்லையா? அவரை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து முயலுங்கள்.

உங்கள் கனவுகளுக்கு நீங்களே பிரம்மாக்கள். அவற்றிற்கு நீங்கள் உயிர் கொடுக்கவில்லையென்றால் அவை உருவாகப் போவதில்லை. நீங்கள் கனவாக மட்டுமே விட்டு வைத்த உயர்ந்த விஷயங்கள் எத்தனை? அவை உருவாக ப்ரூக்ளின் பாலத்திற்காக வாஷிங்டன் ரோப்ளின் செய்த முயற்சிகளின் அளவில் சிறிதாவது செய்திருக்கிறீர்களா? சிந்தியுங்கள். உங்கள் சிந்தனை உங்களைச் செயல்புரிய வைக்கட்டும்.

Saturday 24 September 2011

Free Mp3 Tamil Songs


Free Mp3 Tamil Songs Download From The Movie 7 Aum Arivu (7aam Arivu) 

Music By Harris Jayaraj

7 Aum Arivu (7aam Arivu) - Harris Jayaraj

7 Aum Arivu (7aam Arivu) - Harris Jayaraj

7 Aum Arivu (7aam Arivu) Tamil Movie, 7 Aum Arivu (7aam Arivu) Songs Free Download Music By Harris Jayaraj - 7 Aum Arivu (7aam Arivu)

Featuring : Surya Sivakumar, Shruti Haasan

Production : Red Giant Movies
Starring : Surya Sivakumar, Shruti Haasan
Director : A. R. Murugadoss
Lyrics : Pa.Vijay, Na.Muthukumar, Kabilan, Madhan Karky 






**********************************************************************************

Free Mp3 Tamil Songs Download From The Movie Mayakkam Enna
Music By G. V. Prakash Kumar

Mayakkam Enna - G. V. Prakash Kumar

Mayakkam Enna - G. V. Prakash Kumar

Mayakkam Enna Tamil Movie, Mayakkam Enna Songs Free Download Music By G. V. Prakash Kumar - Mayakkam Enna

Featuring : Dhanush, Andrea Jeremiah

Production : K. Vimalgeetha
Starring : Dhanush, Andrea Jeremiah
Director : Selvaraghavan
Lyrics : Selvaraghavan, Dhanush 





கௌரவம்


"பார்த்தா பிச்சைக்காரி மாதிரித் தெரியுது. ஆனா நீங்க தான் வரச் சொன்னதா அந்தப் பொண்ணு சொல்லுது. பேரு காவேரியாம். வாட்ச்மேன் என்ன செய்யறதுன்னு கேட்கறான்"

வேலைக்காரி சொன்னவுடன் அமிர்தம் எதுவும் புரியாமல் விழித்தாள். "நான் ஏன் பிச்சைக்காரியை வரச் சொல்றேன்.." என்றபடி யோசித்தவளுக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை.

"நீங்க எழுதினதா ஒரு லெட்டரையும் கையில் வச்சிருக்காளாம்"

லெட்டர் என்றதும் அமிர்தத்தின் மூளையில் ஒரு பொறி தட்டியது. வீடு முழுவதும் ஏ.சி.யாக இருந்தாலும் அமிர்தத்திற்கு திடீரென வியர்த்தது. இதயம் படபடவென அடித்துக் கொண்டது. "வரச்சொல்லு" என்றாள்.

வேலைக்காரி திகைத்துப் போனாள். இப்படிப் பட்ட மனிதர்கள் அவளுக்குத் தெரிந்த வரை இந்த பங்களாவின் மெயின் கேட்டைத் தாண்டி இது வரை உள்ளே நுழைந்ததில்லை. தன் திகைப்பை மறைத்துக் கொண்டு அந்தப் பெண்ணை அழைத்து வரப் போனாள்.

அவள் அழைத்து வரும் வரை அமிர்தத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. மேற்கொண்டு சாப்பிடவும் பிடிக்கவில்லை. அந்தப் பெண் சிறு குழந்தையாக இருந்த போது பார்த்திருக்கிறாள். இப்போது அவள் எப்படி இருப்பாள் என்று பல உருவங்களை மனதில் ஏற்ப்படுத்திப் பார்த்தவளுக்கு நிஜமாகவே பார்க்கப் போகிறோம் என்ற போது பரபரப்பாய் இருந்தது.

அந்தப் பெண் தயக்கத்துடன் வந்தாள். ஏழ்மை தனது முத்திரையை அவள் மீது குத்தியிருந்தது. அமிர்தம் அவளைக் கூர்ந்து பார்த்தாள். கலைந்த தலைமுடி, ஆங்காங்கே கிழிசல் தைக்கப்பட்ட வெளிறிப் போன சேலை, முகத்தில் லேசாய் கலவரம், கையில் ஒரு பெரிய பழைய துணிப்பை...

காவேரி மௌனமாகக் கை கூப்பினாள்.

அமிர்தத்தின் வயிற்றை என்னவோ செய்தது. சமாளித்துக் கொண்டு வரவேற்றாள். "வாம்மா உட்கார்"

அந்தப் பெண் உட்காராமல் அவளையே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றாள். இருவருக்கும் என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இந்தப் பெண்ணின் தாயார் இவளை வயிற்றில் சுமந்து கொண்டு இதே பங்களாவிற்கு வந்தது இன்னமும் அமிர்தத்திற்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர்களது கம்பெனியின் வெளியூர் கிளையில் அப்போது அவள் வேலை செய்து கொண்டிருந்தாள். மிகவும் அழகாக இருந்தாள். அன்று அமிர்தத்தின் மாமனார் தான் அவளிடம் கறாராகப் பேசினார். "அவன் பலாத்காரம் செஞ்சான், கல்யாணம் செஞ்சுக்கறேன்னு சொன்னான்னு சொல்லிப் பிரயோஜனம் இல்லை. இதோ இங்க நிக்கறாளே இவ தான் அவன் சம்சாரம். பேர் அமிர்தம். ஒரு ஆளுக்கு உசிரோட ஒரு சம்சாரம் தான் இருக்க முடியும். அதுக்கு மேல இருக்கிறவங்களுக்கு இந்த சமூகத்தில் பேர் வேற. என்கிட்ட சொன்னதை ஊரெல்லாம் சொல்லிகிட்டு திரிஞ்சேன்னு தெரிஞ்சா என் கம்பெனில பணம் கையாடல் பண்ணிட்டேன்னு உள்ளே தள்ளிடுவேன். இனி இந்தப் பக்கமோ என் கம்பெனிப் பக்கமோ வராம என் கண்ணில் படாம தப்பிச்சுக்கோ".

போவதற்கு முன்னால் அவள் முகத்தில் தெரிந்த வலி அமிர்தத்தை பல நாள் தூங்க விடவில்லை. விசாரித்ததில் அந்தப் பெண் ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள் என்றும் அவர்கள் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் தான் ஆகிறதென்றும் ந்¢ஜமாகவே ஒரு அப்பாவி என்றும் தெரிந்தது. கணவனுடன் இரண்டு நாள் பேசாதிருந்தாள். அந்தப் பெண்ணின் அப்பாவித்தனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிறு குற்றவுணர்வு கூட இல்லாமல் இருந்த தன் கணவனுடன் வாழப் பிடிக்காமல் மூன்றாவது நாள் தாய் வீட்டுக்குப் போய் விட்டாள். தாய்வீட்டாரோ அவளது இரு குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கச் சொல்லித் திருப்பி அனுப்பினார்கள். அந்தக் காலச் சமூக நிர்ப்பந்தங்கள் அவளைக் கட்டிப் போடவே, இயலாமையுடன் கூனிக்குறுகிப் புகுந்த வீட்டுக்குத் திரும்பி வந்தாள். கனவில் எல்லாம் அந்தப் பெண் வந்து அவள் குடும்பத்தார்களையும் அவள் குழந்தைகளையும் சபித்தாள். சில நாட்கள் கழித்து அந்தப் பெண் ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்ததும் அவள் சுமார் நூறு மைல் தள்ளி ஒரு ஊரில் இருப்பதும் அமிர்தத்திற்குத் தெரிய வந்தது. வீட்டார் யாருக்கும் தெரியாமல் அவளை ஒரு முறை பார்த்து விட்டு வந்தாள். கையோடு சிறிது பணத்தையும் கொண்டு போயிருந்தாள். முதலில் அந்தப் பெண் அதை வாங்க மறுத்தாள்.

"உனக்காக இல்லம்மா. இந்தக் குழந்தைக்காக இதை வாங்கிக்கோ. இது என்ன பாவம் செய்தது சொல்லு. என்னால வேறெந்த உதவியும் செய்ய முடியாது. நான் மாசா மாசம் என்னால் முடிஞ்சதை அனுப்பறேன். இந்தக் குழந்தையை நல்லாப் படிக்க வை. இது என் புருசன் செஞ்சதுக்குப் பரிகாரம் காட்டியும் அவள் படிப்புக்கும் அடிப்படை வசதிக்கும் உபயோகமாயிருக்கும். எனக்கும் ரெண்டு குழந்தைகள் இருக்கு. அதுக நல்லா வரணும்னு பிரார்த்தனை இருக்கு. அது பலிக்கணும்னா உன் குழந்தைக்கு நான் ஏதாவது செய்யணும்னு என் மனசாட்சி சொல்லுது. வாங்கிக்கம்மா"

கடைசியில் அவள் அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டாள். அன்று முதல் எந்த மாதமும் பணம் அனுப்ப அமிர்தம் தவறியதேயில்லை. வருடா வருடம் அனுப்பும் தொகையையும் அதிகப்படுத்தி வந்தாள். ஆரம்பத்தில் விஷயம் தெரிய வந்த போது கணவனும் வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் அமிர்தம் மிக உறுதியாக இருந்ததால் மறுபடி அந்தப் பெண்ணையும் குழந்தையையும் போய் சந்திக்கக் கூடாது என்ற ஒரு கட்டுப்பாடோடு நிறுத்திக் கொண்டார்கள். அப்படி அவள் போனாள் என்று தெரிந்தால் பணம் அனுப்பக் கூட விட மாட்டோம் என்று பயமுறுத்தினார்கள். ஆனால் அந்தப் பெண்ணைப் பற்றி அமிர்தத்துக்குத் தகவல் தரும் நபர் உடனடியாக வேலையிலிருந்து நிறுத்தப் பட்டார். கிட்டத் தட்ட இருபது வருடங்கள் கழித்து இந்த மாத மணியார்டர் மட்டும் விலாசதாரர் இறந்து விட்டார் என்ற தகவலுடன் திரும்ப வந்தது. கணவனிடம் தகவலைத் தெரிவித்தாள்.

வேண்டா வெறுப்பாக அவர் கேட்டார். "இதை என்கிட்ட ஏன் சொல்றே"

""அம்மாவும் செத்துட்டா. ஒரு வயசுப் பொண்ணு அனாதரவா தனியா எப்படி இருக்க முடியும்"

"அதுக்கு என்ன செய்யணும்னு சொல்றே"

"அந்தப் பொண்ணுக்கு இனியாவது நாம ஆதரவு தரணும். நான் வரச் சொல்லப் போறேன்"

கணவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. "நீ என்னை நாலு பேர் முன்னாடி அவமானப் படுத்தாம விடமாட்டே"

"அவமானம் நம்ம கீழ்த்தரமான நடத்தையில் இருக்கு. அது வெளிய தெரிகிற போது புதிதாய் வர்றதல்ல. இது உங்கள மாதிரி ஆளுகளுக்குப் புரியாது"

தொடர்ந்த வாக்குவாதத்தின் முடிவில் அந்தப் பெண் வந்த பின் ஓரிரு வாரங்களில் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் சேர்த்து விடுவது என்றும் பிறகு ஒரு நல்ல வாழ்க்கை அமைய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் முடிவாகியது.

"ந்¢யாயமா நாம போய் கூட்டிட்டு வரணும்"

அவர் பார்வையாலேயே அவளைச் சுட்டெரித்தார். "பெரிய நியாய தேவதை. லெட்டர் போடு போதும்"

இனி அதிகம் பேசினால் வேதாளம் பழையபடி முருங்கை மரம் ஏறினால் என்ன செய்வது என்று அவளுக்குப் பயம் வந்தது. இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே அதிகம் என்று நினைத்தவளாய் அமிர்தம் உடனடியாக அந்தப் பெண்ணிற்குக் கடிதம் எழுதினாள். எழுதி ஒரு வாரம் கழித்து அந்தப் பெண் வந்திருக்கிறாள்.

"ஏம்மா நிற்கிறாய். உட்கார்"

அவள் மிகுந்த தயக்கத்தோடு சோபாவில் உட்கார்ந்தாள். அந்தப் பங்களாவும், அங்கு தெரிந்த செல்வச் செழிப்பும் அவளுக்கு பிரமிப்பை உண்டாக்கியிருந்ததாய்த் தோன்றியது. தோற்றத்தில் தன் தாயைப் போலவே இருந்தாலும், தாயிடம் காணப் படாத ஒரு உறுதி மகளிடம் தென்படுவதாக அமிர்தத்திற்குத் தோன்றியது. மெள்ள அமிர்தம் பேச்சுக் கொடுத்தாள்.


"காவேரி நீ என்னம்மா படிச்சிருக்கே"

"ஒன்பதாவது வரைக்கும் படிச்சிருக்கேன். அம்மா பக்கவாதம் வந்து படுத்தப்புறம் மேல படிக்கலைங்க"

அவள் தாய் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது உண்மையில் அமிர்தத்திற்குத் தெரிந்திருக்கவில்லை. "எனக்கு ஒரு கடிதம் போட்டிருக்கலாமே. என்னால முடிஞ்ச உதவியைச் செஞ்சிருப்பேனே. படிப்பை நிறுத்தியிருக்க வேண்டாமே" அமிர்தத்தின் முகத்திலும் பேச்சிலும் நிஜமாகவே ஆதங்கம் தெரிந்தது. தனது மகனும் மகளும் நன்றாகப் படித்து பெரிய நிலையில் மேலை நாடுகளில் இருக்க, இந்தப் பெண் படிக்க முடியாமல் நின்றது அவளுக்கு மிக வருத்தமாக இருந்தது.

காவேரி பதில் சொல்லாமல் அமிர்தத்தையே ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

"என்னம்மா என்னை அப்படிப் பார்க்கறே"

உடனடியாகத் தன் பார்வையை விலக்கிக் கொண்டவள் தானும் பதிலுக்குக் கேட்டாள். "உங்க குழந்தைக என்ன படிச்சிருக்காங்க"

தயக்கத்துடன் அமிர்தம் சொன்னாள் "ரெண்டு பேரும் இஞ்சீனியரா அமெரிக்கால இருக்காங்க"

கேட்டு காவேரி சந்தோஷப் பட்ட மாதிரி தெரிந்தது. "எப்பவாவது வருவாங்களா?"

"வருஷத்துக்கு ஒரு தடவை வருவாங்க. போன மாசம் தான் வந்துட்டுப் போனாங்க" என்ற அமிர்தம் அப்போது தான் அவள் ஒரு பையைத் தவிர வேறு எதுவும் கொண்டு வராததைக் கவனித்து கேட்டாள். "வெறும் இந்தப் பையோட வந்திருக்கியே. உன்னோட பாக்கி சாமான் எல்லாம் எங்கே?"

ஒரு கணம் தயங்கி விட்டுச் சொன்னாள். "கொண்டு வரலைங்க".

"ஏம்மா, நான் விவரமா எழுதியிருந்தேனே"

"இல்லைங்க எனக்குத் திரும்பப் போகணும்"

அமிர்தம் திகைத்துப் போய்க் கேட்டாள். "எங்கே போறே?"

"எங்க ஊருக்குத்தான். எனக்கு அங்க ஒரு ஸ்கூல்ல ஆயா வேலை கிடைச்சிருக்கு. இப்பப் போனா ராத்திரிக்குள்ள போய் சேர்ந்து நாளைக்கு வேலைக்குப் போயிக்கலாம். லீவு எடுக்க முடியாது."

அமிர்தம் மறுப்பு சொல்ல வாயைத் திறந்தாள். அவளைப் பேச விடாமல், "ஒரு நிமிஷம்..." என்று சொல்லி விட்டு ஒரு ஓரமாக வைத்திருந்த துணிப்பையை எடுத்தாள்.

"நீங்க கண்டிப்பா தப்பா நினைக்கக் கூடாது. இதைத் திரும்பத் தரலைன்னா எனக்கு சமாதானம் கிடைக்காது. நீங்க மறுப்புச் சொல்லாம வாங்கிக்கணும்"

"என்ன இது..." என்ற படி பையைத் திறந்த அமிர்தம் திகைத்துப் போனாள். உள்ளே கட்டு கட்டாகப் பணம். "எனக்கு ஓண்ணும் புரியலை"

"இது நீங்க இது வரை எங்களுக்கு அனுப்பிச்ச பணம். இதிலிருந்து ஒரு பைசா கூட நாங்க எடுக்கலை. காரணம் அனுப்பினது நீங்கன்னாலும் இது உங்க கணவரோட பணம். அந்த ளோட பணத்தை எடுத்துக்க மனசு ஒத்துக்கல. எங்கள வேண்டாத ஆளை எங்களுக்கும் வேண்டாம். அவரோட காசு வேண்டாம். எத்தனையோ நாள் பட்டினி கிடந்துருக்கோம். மருந்துக்குக் காசு இல்லாம கஷ்டப் பட்டிருக்கோம். ஆனாலும் இதிலிருந்து பணம் எடுத்து உசிரோட இருக்க மனசு பிரியப்படல"

காவேரியின் வார்த்தைகளில் ஒரு பெருமிதம் இருந்தது. வந்த போதிருந்த பலவீனமான குரல் போய் இப்போது குரல் கணீரென்றிருந்தது.

"ந்£ங்க கேக்கலாம் ஏன் இந்தக் காசை அன்னைக்கே திருப்பி அனுப்பிச்சிருக்க வேண்டியது தானேன்னு. பணம் திருப்பி அனுப்புனா உங்க மனசு சங்கடப்படும்னு அம்மா நினைச்சாங்க. அவங்களத் தேடி வந்து பணத்தக் குடுத்து ஒரு பச்சக் குழந்தை கஷ்டப் படாம வளரணும்னு நினைச்ச உங்க மனசு வருத்தப்படக் கூடாதுன்னு அம்மா என்னைக்கும் சொல்லுவாங்க..." சொல்லச் சொல்ல அவளுக்குத் தொண்டையை அடைத்தது.

சுதாரித்துக் கொண்டு தொடர்ந்தாள். "இதை சேத்து வச்சு ஏதாவது அனாதை இல்லத்துக்குக் குடுத்துறலாம்னு அம்மா நினைச்சாங்க. பெருசான பெறகு நான் ஒத்துக்கல. யாரு பணத்த யாரு தர்மம் செய்யறது? செய்ய என்ன உரிமையிருக்குன்னு எனக்குத் தோணிச்சு. அதனால இதைத் திரும்பத் தரணும்னு நான் பிடிவாதமாய் இருந்தேன். அம்மா இதை திரும்ப உங்களுக்குத் தர்றது உங்கள அவமானப்படுத்தற மாதிரின்னு சொல்லி அப்ப தடுத்துட்டாங்க. ஆனா எனக்கு அப்படித் தோணல. அதான் அவங்க செத்துப் போனவுடனே இதைக் கொண்டாந்துட்டேன். நீங்க என்னப் புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்"

"இந்தப் பணத்தில் உனக்கு உரிமை இருக்கும்மா. இது இனாம் அல்ல. இந்தப் பணத்துல மட்டுமல்ல. இந்த வீட்டுலயும் என் குழந்தைகளுக்கு இருக்கும் உரிமை உனக்கும் இருக்கு"

" நீங்க என்ன இன்னும் சரியாப் புரிஞ்சுக்கலன்னு தோணுது. நான் பொறக்கக் காரணமா இருந்ததால மட்டும் அந்த ஆள் எனக்கு அப்பான்னு ஆயிடாது. எடுத்துப் பாராட்டி சீராட்டாத ஒரு மனுசனை, ஒரு தடவை வந்து பார்க்கணும்னு கூடத் தோணாத அந்த ஆளை அப்பாங்கறதோ, அவர் காசுக்கு உரிமை கொண்டாடறதோ எனக்கு அருவருப்பா இருக்கு"

அமிர்தம் மிகுந்த வருத்தத்துடன் சொன்னாள் "நீ சொல்றது எனக்குப் புரியுதும்மா. ஆனா இத்தனை நாள் நான் கொஞ்சமாவது நிம்மதியா இருந்திருந்தேன்னா அதுக்குக் காரணம் உங்க வாழ்க்கையை நான் கொஞ்சமாவது பண ரீதியிலாவது சுலபமாக்கி இருக்கிறேன்னு நினைச்சுத் தான். ஆனா இத்தனை நாள் இப்படிக் கஷ்டப்பட்டுட்டீங்களேம்மா"

"அந்தக் கஷ்டத்துலேயும் இந்தக் காசைத் தொடாம வச்சிருக்கோம்கிற பெருமை இருந்துச்சும்மா" என்ற காவேரி லேசான மனத்துடன் தொடர்ந்தாள் " உங்கள ஒரு தடவை பார்க்கணும்னு எனக்குப் பல தடவை தோணியிருக்கு. ஒவ்வொரு மாசமும் மறக்காம பணம் அனுப்புன உங்க நல்ல மனசுக்கு நானும் அம்மாவும் ரொம்பவே கடன் பட்டிருக்கோம். பொதுவா இந்த இரக்கம் எல்லாம் நாளாக நாளாக கம்மியாய் கடைசில காணாமப் போயிடும். ஆனா உங்க மனசுல மட்டும் இன்னைக்கு வரைக்கும் இந்த மனிதாபிமானம் குறையல. உங்கள என்னைக்கும் மறக்க மாட்டேன்."

அமிர்தம் வாயடைத்துப் போய் நின்றாள். இந்தப் பெண்ணிற்கு இது வரை உதவவில்லை, இனியும் உதவ இவள் அனுமதிக்க மாட்டாள் என்ற உண்மை உறைத்ததால் அவள் மனம் கனத்தது.

அவளது களங்கமில்லாத மனதில் தோன்றியது அவள் முகத்திலும் பிரதிபலித்திருக்க வேண்டும். அவளது எண்ணத்தைப் புரிந்து கொண்டவளாய் காவேரி மனம் நெகிழ்ந்து போய் சொன்னாள். "நீங்க என்னைப் பத்திக் கவலைப்படாதீங்கம்மா. இவ்வளவு நாள் அம்மா மருந்துக்கே நான் சம்பாதிச்சதெல்லாம் செலவானதால தான் கொஞ்சம் சிரமப் பட்டுட்டேன். இனி அந்த செலவில்லாததால் என் சம்பாத்தியம் எனக்குத் தாராளமாப் போதும். நான் கிளம்பறேம்மா"

பணப் பையை டைனிங் டேபிள் மீது வைத்து விட்டு காவேரி திரும்பும் போது அறை வாயிலருகே முகம் சிறுத்து சிலையாக ஒரு மனிதர் நின்றிருந்தார். அவர் அவர்களிருவரையும் ஏதோ வேற்றுக் கிரக மனிதர்களைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறந்ததிலிருந்து ஒரு முறை கூட அவள் பார்த்திராத தந்தையை ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆசை எள்ளளவும் அவள் மனதில் இருந்ததில்லை. எனவே கதவு ஓரமாக நின்றிருந்த அந்த மனிதர் தன் தந்தையாகத் தான் இருக்க வேண்டும் என்று தெரிந்தும் ஏறெடுத்தும் பார்க்காது கதவை நேராகப் பார்த்த படி காவேரி கம்பீரமாக வெளியேறினாள்.

Thursday 22 September 2011

விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 12



Mirrored site என்பது ஏற்கனவே இணையத்தில் வலையேற்றப்பட்டிருக்கும் ஒரு இணையத்தளத்தை பெயருக்கேற்றாற் போல் அப்படியே கண்ணாடியாய் பிரதிபலிப்பது தான். ஏன் கண்ணாடி போல என்று விளக்கப்படுகிறதென்றால் அசலான இணையத்தளத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறதோ அடுத்த நிமிடம், அப்படியே நகலில் பிரதிபலிக்கப்படும் (relative link). இதைச் சாத்தியப்படுத்துவதற்கு வழக்கம் போல் இணையமெங்கும் மென்பொருட்கள் குவிந்து கிடக்கின்றன, வழக்கம் போல் கூகுளாடி பெற்றுக்கொள்ளலாம். (உதா: HTTrack ). இவ்வாறு பிரதிபலிக்கும் தளங்களைத் (mirrored sites) தயார் செய்வதற்குத் தேவையானப் பொருட்கள் பிரதிபலிக்கச் செய்யும் மென்பொருள், உங்களுக்குச் சொந்தமாக இணைய வழங்கியில் கோப்புகளைச் சேமிக்க இடம், மற்றும் அசல் இணையதளத்தின் இணைய வழங்கியின் விவரங்கள் (hosting servers).

மேற்சொன்ன விவரங்களை, பிரதிபலிக்கும் மென்பொருளில் உள்ளிட்டு இயங்க விட்டுவிட்டால், அதன் பின்னர் நம் மற்ற வேலைகளை கவனிக்கப் போய்விடலாம். அந்த மென்பொருள் என்ன தான் செய்யும்?. குறிப்பிட்டக் கால இடைவெளியில் அசல் தளத்தின் வழங்கியில் இருக்கும் கோப்புகளையும், பிரதிபலிக்கும் தளத்தின் வழங்கியில் இருக்கும் கோப்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும். அசல் தளத்தில் ஏதேனும் புதிய கோப்புகள் வலையேற்றப்பட்டிருந்தாலோ அல்லது இருந்த கோப்புகள் நீக்கப்பட்டிருந்தாலோ அதே மாற்றங்களை பிரதிபலிக்கும் தளத்தின் வழங்கியில் செயல்படுத்தும்(Sync.). விக்கிலீக்ஸ் ஆர்வலர்களில் பெரும்பாலானோர் இணையத் தொழில்நுட்ப வல்லுநர்கள் என்பதும், அவர்களுக்கும் இணைய வழங்கிகள் கோப்புகளைச் சேமிக்க இடம் வைத்திருப்பதென்பது நம்மூரில் கேபிள் இணைப்பைப் போல, சகலரும் வைத்திருப்பார்கள்.


விக்கிலீக்ஸ் தளத்தினை முடக்கி விட்டோம் என்று அமெரிக்கா ஊடகங்களில் உரத்துக் கூவிக் கொண்டிருந்த பொழுதுகளில், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆர்வலர்கள் சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த சில நிமிடங்களில் விக்கிலீக்ஸ் தளத்தின் நகல்கள் நூற்றுக்கணக்கில் தயாராகிக் கொண்டிருந்தன. இவ்வாறு பிரதிபலிக்கப்படும் தளங்கள் யாவும் உலகின் வெவ்வேறு மூலைகளில் உள்ள நாடுகளின் வழங்கியில் சேமிக்கப் பட்டதென்பதும், அந்தந்த நாடுகளின் சட்டதிட்டத்தின் படி அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படுவதென்பது மிகக் குஷ்டமென்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றளவும் பல நாடுகளில் இணையத்தொடர்புகளைக் கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் போதிய சட்டங்கள் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளவும். இவையனைத்தும் நடந்து கொண்டிருந்த வேளைகளில் ஜூலியனைக் கைது செய்ய லண்டன் மாநகரக் காவல்துறை முயற்சி செய்ததும், ஒவ்வொரு நாளும் புதிதாகச் சில ஆவணங்கள் விக்கிலீக்ஸ் தளத்தின் மூலமாக வெளியிடப்படுவதும் தடங்கலின்றி நடந்து கொண்டிருந்தன. தளத்தையும் முடக்க முடியவில்லை, ஆளையும் பிடிக்க வைக்க முடியவில்லை என்று குமுறிய அமெரிக்காவிற்குத் தினமும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்த ஆவணங்களின் கொசுத் தொல்லையும் சேர்ந்து தாங்கொனாத் துயரமடைந்து, ஜூலியனை நோக்கித் தன் இறுதி தாக்குதலை நடத்தியது.


ஜூலியன் பயன்படுத்தும் விக்கிலீக்ஸ் தளத்தின் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள், Paypal தளத்தின் கணக்குகள், VISA மற்றும் MasterCard கடன் அட்டைகள் என சகலமும் முடக்கப்பட்டன. விக்கிலீக்ஸ் தளத்தின் செயல்பாடுகளுக்கும், ஜூலியன் இணையத்தில் ஆடும் கண்ணாமூச்சிகளுக்கு பணம் ரொம்ப, ரொம்ப அவசியம். விக்கிலீக்ஸ் தளத்தில் வெளியிடும் தகவல்களை உடனுக்குடன் அவர்களுடன் சேர்ந்து வெளியிடும் அமெரிக்க, ஐரோப்பிய அச்சு ஊடகங்கள் மூலம் விக்கிலீக்ஸ் தளத்திற்கு நிதி அளிக்கப்படுவதாக பரவலாகப் பேசப்பட்டாலும்,ஜூலியனின் முக்கிய நிதி ஆதாரம் விக்கிலீக்ஸ் தளத்திற்கு, Paypal மூலம் நன்கொடை வழங்குபவர்கள் தான். தனது ஜீவநாடியான நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டதும், இனி மறைந்திருந்தும் உபயோகமில்லை என்பதை உணர்ந்த ஜூலியன், தனது வழக்கறிஞர்கள் துணையுடன் லண்டன் மாநகரக் காவல்துறையிடம் சரணடைந்த சம்பவம் நிகழ்ந்தது. ஊரையே உலையில் போட்டு விட்டு மலர்ந்த முகத்துடன், பூரித்துப் போய் சிறை செல்லும் இக்காலத்தில், எந்தவித உணர்வையும் காட்டாமல் சரணடைந்த ஜூலியன், சிறைக்குச் செல்வதற்கு முன்பு விக்கிலீக்ஸ் வழக்கம் போல் செயல்படும் என்று சொல்லிச் செல்ல ஜூலியன் மறக்கவில்லை. அதுவரை ஜூலியனால் எதுவும் சாத்தியம் என்று நம்பிக்கைக் கொண்டிருந்த விக்கிலீக்ஸ் ஆர்வலர்களுக்கு இச்சம்பவம் மிகுந்த ஏமாற்றத்தையும், கோபத்தையும் கொடுத்தது.


இக்கோபத்தின் வெப்பம் அப்படியே ஜூலியனை முடக்கியவர்களிலேயே முக்கியமானவர்களான VISA மற்றும் MasterCard பக்கம் திரும்பியது. வெறும் கணினியும், இணைய இணைப்பும் வைத்துக் கொண்டு சிறிய அறைக்குள் செயல்படும் இவர்களால் மிகப்பெரிய நிறுவனங்களை என்ன செய்துவிட முடியும் என்று நினைத்தவர்கள் அனைவரையும் வாய்பிளக்கும் வகையிலான இணையப்போர் நடந்தது. பெயரிலிகள் இணைய நற்பணி மன்றம் (anonymous) என்று தங்களை அழைத்துக் கொண்ட குழு ஒன்று, "Operation Payback" என்ற தாக்குதல் திட்டத்தினை அறிவித்தது. DDoS attack என்ற இணையக் குட்டிச்சாத்தான், VISA மற்றும் MasterCard இணையத் தளங்களின் மேல் ஏவி விடப்பட்டது. DDoS (Distributed Denial of Service) தாக்குதல் என்பது அரசியல் கட்சிகள் ஊர்வலம் சென்று சாலைகளை முடக்குவதைப் போலத் தான். சும்மா இருக்கும் இணையத்தளத்தினை நோக்கி பல்வேறு கணினிகளில் இருந்து ஏகப்பட்ட தகவல் இணைப்புகளை அனுப்பி போலியான இணையப் போக்குவரத்தினை அளவுக்கு மீறி ஏற்படுத்துவதன் கொடுமை தாங்காமல், தாக்குதலுக்கு உள்ளாகும் இணைய தளத்தின் வழங்கிக் குப்புறப் படுத்துக் கொள்ளும். இத்தாக்குதலை தொடுப்பதற்கென சிறப்பு மென்பொருட்கள் உள்ளன.

இந்த தாக்குதலில் (operation payback), Visa மற்றும் Mastercard தளங்கள் வெற்றிகரமாக முடக்கப்பட்டாலும், இலவச இணைப்பாக amazon நிறுவனத்தின் இணையத்தளத்தின் மேல் நடத்தப்பட்ட தாக்குதலை அத்தளம் வெற்றிகரமாக சமாளித்தது. இத்தனைக் களேபரங்களுக்கு மத்தியில், சந்தடி சாக்கில் விக்கிலீக்ஸ் தளத்தின் மீதும் DDoS தாக்குதல் நடத்தப்பட்டது. தோல்வியில் முடிந்த அத்தாக்குதல் சி.ஐ.ஏ அல்லது அமெரிக்க அரசாங்கத்தின் சார்பானவர்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது :).


ஜூலியனின் கைதுக்கு எதிராக நடந்த போராட்டங்கள், கைது செய்யப்பட்ட ஜூலியனுக்கு நடந்தவை, விக்கிலீக்ஸ் தளத்தின் எதிர்காலம் ஆகியவை குறித்து அடுத்த பதிவில் ...........

"விக்கிலீக்ஸ் உலகின் தனித்துவமான வெளியீட்டு நிறுவனம்" - ஜூலியன்

Wednesday 21 September 2011

இலையுதிர்காலம்


(இச்சிறுகதை தினமலர்-வாரமலர் போட்டியில் பரிசு பெற்றது)


பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்று நாட்களாக அந்தத் தகவலை தாயிடம் சொல்லத் தயங்கினான் சதீஷ்.
""ஏன் இப்படி பயந்து சாகறீங்க?'' என்று எரிந்து விழுந்தாள் அவன் மனைவி சத்யா.

""இல்லை... அம்மாவுக்கு இது பெரிய ஷாக்காய் இருக்கும்!''


""இதப்பாருங்க... மாமியாரைப் பார்த்துக்கலாம். அது என் டியூட்டி. ஆனா, மாமியாரோட மாமியாரைப் பார்த்துக்கறதெல்லாம் டூ மச்...''

அவன் ஒன்றும் சொல்லாமல் மவுனமாய் இருந்தான்.

""அடுத்த வாரம் அனுப்பணும்ன்னா இப்பவே சொன்னாத் தான் அவங்களுக்குப் பேக் பண்ண டைம் கிடைக்கும். சைக்காலஜிக்கலா தயாராகவும் முடியும். கிழவி இப்ப கோவிலுக்குப் போயிருக்கா. அதனால, இப்பவே போய் உங்க அம்மாவிடம் சொல்றீங்க, நீங்க!''

மனைவியிடம் வழக்கம் போல் தலையசைத்தான் சதீஷ். தயக்கத்துடன் ஹாலில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த அம்மா முன் சோபாவில் உட்கார்ந்தான்.

புத்தகத்திலிருந்து பார்வையை எடுத்து மகனைப் பார்த்தாள் ஜானகி.

""அம்மா... நான் பாட்டி பேரை முதியோர் இல்லத்தில் பதிவு செஞ்சிருக்கேன், அட்வான்சும் கொடுத்துட்டேன்!''

ஜானகியின் கையில் இருந்த புத்தகம் நழுவிக் கீழே விழுந்தது. அவள் அதிர்ச்சியுடன், ""என்னடா சொல்றே?'' என்றாள்.

தர்ம சங்கடத்துடன் தங்கள் அறைக் கதவு அருகே நின்ற சத்யாவைப் பார்த்தான் சதீஷ். அவள், "தைரியமாய் பேசுங்கள்!' என்று சைகை காண்பித்தாள்.

கீழே விழுந்த புத்தகத்தை மேஜை மீது வைத்து அதைப் பார்த்தபடியே சொன்னான் சதிஷ்...

""இவ்வளவு வருஷமாய் பாட்டியை நாம பார்த்துகிட்டாச்சும்மா, இனிமேயும் பார்த்துக்கறது கஷ்டம்மா!''

""பாட்டி நல்லாத் தானே இருக்காங்க! அவங்கள பார்த்துக்கிறதில் கஷ்டம் என்னடா இருக்கு?''

அவன் பதில் சொல்லவில்லை.

தன் கோபத்தை அப்படியே விழுங்கிக் கொண்டு சொன்னாள் ஜானகி...

""சதீஷ்! என் சித்தி கொடுமைக்காரின்னு, உன்னை பிரசவிக்க அவங்க எங்க வீட்டுக்குக் கூட என்னை அனுப்பாம தானே பிரசவம் பார்த்தவங்கடா!''

""அதுக்காக தான் அப்பா செத்தப்பறம் கூட அவங்களை வெளியே அனுப்பாம நீயே இத்தனை வருஷம் பார்த்துகிட்டியேம்மா...''

""உன்னோட பி.ஈ., படிப்புக்கு பீஸ் கட்ட தன்கிட்ட இருந்த கடைசி நகையைக் கூட வித்தவங்கடா அவங்க!''

""அதுக்காக தான் மாசா, மாசம் முதியோர் இல்லத்தில் ஆயிரத்து 500 ரூபாய் கட்ட ஒத்துக்கிட்டேன்மா!''

""நாம இருக்கறப்போ ஒரு அனாதை மாதிரி அவங்களை ஏண்டா அங்க சேர்க்கணும்?''

""பாட்டிக்கு நாம மட்டும் இல்லையேம்மா. அத்தை கூட இருக்கா இல்லையா? வேணும்ன்னா, பெத்த பொண்ணு கூட கொஞ்ச நாள் இருக்கட்டுமே...''

""அவ அவங்களுக்கு ஒரு வேளை சோறு ஒழுங்கா போட மாட்டாடா!''

""அது தெரிஞ்சு தான் முதியோர் இல்லத்தில் சேர்க்க நாங்க முடிவு செஞ்சோம்!''

"பொறுமையாக இரு!' என்று தனக்குள் பல முறை சொல்லிக் கொண்டு மகனைக் கேட்டாள் ஜானகி...

""பாட்டியால உங்களுக்கு என்னடா தொந்தரவு? ஏன் அனுப்ப முடிவு செஞ்சீங்க?''

தங்கள் அறைக் கதவைப் பார்த்தான் சதீஷ். உள்ளே போயிருந்தாள் சத்யா.

வேறு வழியில்லாமல் உண்மையை அவன் சொன்னான்...

""பாட்டி இங்க இருக்கறது சத்யாக்கு பிடிக்கலைம்மா!''

மகனை அருவெறுப்புடன் பார்த்தாள் ஜானகி. அவளுக்குள் ஏற்பட்ட பூகம்பம் அடங்க சிறிது நேரம் பிடித்தது.

பின் உடைந்த குரலில் மகனிடம் சொன்னாள்...

""சதீஷ் நல்லா யோசிடா... இது சரியில்லைடா!''

""நாங்க நல்லா யோசிச்சாச்சும்மா!''

மவுனமாக கண்களை மூடி சிறிது நேரம் அமர்ந்திருந்தாள் ஜானகி.

""உனக்கு அவங்க கிட்டே சொல்ல கஷ்டமாய் இருக்கும்ன்னு எனக்குத் தெரியும். பக்குவமாய் நானே அவங்க கிட்ட சொல்றேன்மா!''

ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தாள் ஜானகி.

சிறுவயதிலேயே தாயை இழந்து சித்தியிடம் பல கொடுமைகளை அனுபவித்த ஜானகி, தன் திருமணத்திற்குப் பிறகு மாமியார் விசாலத்திடம் ஒரு தாயையே பார்த்தாள். சூது, வாது தெரியாத, நேசிக்க மட்டுமே தெரிந்த விசாலமும் தன் மருமகளை மகளாகவே பாவித்தாள்.

ஜானகியின் நாத்தனார் கிரிஜா, தன் தாயைப் போல யதார்த்தமானவளாக இருக்கவில்லை. அவள் ஜானகியைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் தன் தாயிடம் சொல்வதை பலமுறை கேட்டிருக்கிறாள் ஜானகி.

அப்போதெல்லாம், "சும்மா வாயிற்கு வந்தபடி பேசாதேடி!' என்று மகளை விசாலம் அடக்கினாளே தவிர, என்றுமே அது பற்றி அவள் மருமகளிடம் விசாரித்தது கூட கிடையாது. மகள், மருமகளின் பிரசவத்தை தான் ஒருத்தியே பார்த்துக் கொண்டாள்.

ஒரு விபத்தில் கணவன் அற்ப ஆயுசில் இறந்து போகும் வரை ஜானகியின் வாழ்வு சந்தோஷமாகவே இருந்தது. அண்ணனின் சாவிற்கு வந்த கிரிஜா, தன் தாயைத் தன்னுடன் அனுப்பி விடுவரோ என்று பயந்து பிணத்தை எடுத்த மறுகணம் அங்கிருந்து மாயமாகி விட்டாள்.

பெரிய சேமிப்போ, சொத்தோ இல்லாத அவர்கள் குடும்பத்திற்கு உதவ உறவினர்கள் யாரும் இருக்கவில்லை நிராதரவாக நின்ற ஜானகிக்கு, அவள் மன உறுதியும், அவளது ருசியான சமையலும் கை கொடுத்தன. அவள் ஒரு கல்லுõரிக்கு அருகே மெஸ் ஒன்றை ஆரம்பித்தாள். மாமியாரும், மருமகளும் ஓடாய் உழைத்தனர்.

சில வருடங்களுக்குப் பிறகு விசாலத்தின் முதுமை அவளை உழைக்க ஒத்துழைக்கவில்லை. மாமியாரை உட்கார வைத்து ஜானகி ஒருத்தியே மெஸ்ஸை நடத்தினாள்.

"உனக்கு நானும் பாரமாய் இருக்கேன் ஜானகி!' என்று புலம்பினாள் விசாலம்.

"சும்மா பாரம், கீரம்ன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க அத்தை. என்னை பிறந்த வீட்டுக்குக் கூட அனுப்பாம நீங்களே பிரசவம் பார்த்தீங்க. அப்போ நீங்க என்னைப் பாரம்ன்னு பார்த்தீங்களா!'

"ஒரு பிரசவத்தைப் பார்த்ததைப் பத்தி நீ இன்னும் பேசறே... என் பொண்ணுக்கு மூணு பிரசவம் பார்த்தேன். பெத்து வளர்த்த தாயை இப்ப அவ எட்டிக் கூட பார்க்க மாட்டேன்ங்கிறா!'

விசாலம் என்ன சொன்னாலும் ஜானகிக்கு மாமியார் ஒரு பாரமாய் தோன்றவில்லை. விசாலம் வெற்றிலை பாக்கு சாப்பிட்டுக் கொண்டும், பக்கத்து வீட்டு லட்சுமிப் பாட்டியிடம் பழங்கதைகள் பேசிக் கொண்டும் உட்கார்ந்திருக்க, சிரமம் சிறிதும் தோன்றாமல் கடுமையாய் உழைத்து குடும்பத்தை நடத்தினாள் ஜானகி.

சதீஷ் கல்லுõரிக்குப் போகும் வரை அந்த மெஸ் வருமானம் அவர்களுக்குப் போதுமானதாகவே இருந்தது. அவன் என்ஜினியரிங் சேர்ந்த பிறகு தான் பற்றாக்குறை ஏற்பட்டது. மாமியாரும், மருமகளும் தங்கள் நகைகளை எல்லாம் விற்று சதீஷைப் படிக்க வைத்தனர். அவன் பி.ஈ., முடித்து அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்த போது, மெஸ்ஸை அவர்கள் மூடினர்.

பல ஆசிரியர்களும், மாணவர்களும் உண்மையாகவே வருத்தப்பட்டனர். அவ்வளவு ருசியான சமையல் வேறு எங்கும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்று பின்பு ஜானகியைச் சந்திக்கும் போதெல்லாம் கூறினர்.

சதீஷிற்கு திருமணமாகும் வரை அவர்கள் குடும்பம் சுமுகமாகவே இருந்தது. அவன் மனைவி சத்யா ஒரு வங்கியில் வேலை பார்த்தாள். அவளுக்கு ஆரம்பத்தில் இருந்தே உரத்த குரலில், "டி' போட்டுப் பேசும் விசாலத்தைப் பிடிக்கவில்லை. வீட்டுக்கு வந்த அவளது சிநேகிதிகளின் எதிரிலும் அதே போலப் பேசியது அவளுக்கு பெருத்த அவமானமாக இருந்தது.

ஒரு வேலையும் செய்யாமல், ஒரு பைசாவிற்கும் பிரயோஜனம் இல்லாமல் தண்டமாக இருக்கும் விசாலத்தை, "சுத்த நியூசன்ஸ்' என்று அவள் கணவனிடம் சொல்லாத நாளில்லை.

ஒருமுறை ஏதோ ஒரு வேலையை விசாலத்திடம் சத்யா சொல்ல, அந்த வேலையைத் தானே செய்து விட்டு தன் மருமகளிடம் சொன்னாள் ஜானகி...

"அவங்க காலத்தில் அவங்க வேணும்ங்கிற அளவு வேலை செஞ்சிருக்காங்க. இனிமே உனக்கு ஏதாவது செய்ய ணும்ன்னா நீ என்கிட்டே சொல்லு. நான் செய்யறேன். இந்த வயசான காலத்தில் அவங்க கிட்டே நாம வேலை வாங்கக் கூடாது!' அதிலிருந்து ஜானகி இருக்கையில் விசாலத்திடம் பேசுவதை தவிர்த்தாள் சத்யா.

அவர்கள் புதிய வீட்டுக்கும், பக்கத்து வீதியில் இருந்த லட்சுமிப் பாட்டி தினமும் விசாலத்திடம் பேச வருவதை நிறுத்தவில்லை. அந்தக் கிழவியைப் பார்த்தாலும் சத்யாவிற்குப் பிடிக்கவில்லை. தனக்குப் பிடிக்காததை எல்லாம் ஜானகி இல்லாத போது அவள் விசாலத்திடம் முகத்தில் அடித்தாற் போல சொல்லத் துவங்கினாள்.

விசாலம் சப்தமாய் பேசுவது, வெற்றிலை பாக்கு போடுவது, லட்சுமி பாட்டி அவர்கள் வீட்டுக்கு வருவது எல்லாம் ஒரு காலத்தில் நின்று போயின. சத்யா இருக்கும்போது தானிருக்கும் அறையை விட்டு வெளியே வரக் கூடப் பயந்தாள் விசாலம். ஆனாலும், சத்யாவின் வெறுப்பு ஏனோ குறையவில்லை.

விசாலம் வாய்விட்டு ஒன்றும் சொல்லா விட்டாலும், ஜானகிக்கு எல்லாம் தெரிந்து தானிருந்தன. ஏதோ ஒரு கைதியைப் போல அடங்கி, ஒடுங்கி, பயந்து வாழும் தன் அத்தையைப் பார்க்க அவளுக்கு வேதனையாக இருந்தது.

இன்று சதீஷ் திடீரென்று முதியோர் இல்ல குண்டை போடுகிறான். பிடிக்கவில்லை என்ற வெற்றுக் காரணம் சொல்லி நெருங்கிய சொந்த, பந்தங்களை இவர்களால் எப்படி உதறித் தள்ள முடிகிறது என்பது தான் அவளுக்கு விளங்கவில்லை.

கோவிலிலிருந்து விசாலம் வந்ததும் பாட்டியை சோபாவில் உட்கார வைத்து, மெல்லிய குரலில் சிறிது நேரம் பேசினான் சதீஷ். அவள் அறைக்கு வந்த போது பத்து வயது கூடியது போலத் தளர்ந்திருந்தாள். அந்த முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைத் தாங்கும் சக்தி ஜானகிக்கு இருக்கவில்லை.

நிறைய நேரம் பேசாமல் கட்டிலில் பிரமை பிடித்தது போல உட்கார்ந்திருந்தாள் விசாலம். பின்பு மருமகளிடம் சொன்னாள்...

""பரவாயில்லை! அவன் என்னை நடுத்தெருவில் விட்டுடலியே... பணம் குடுத்து ஒரு இடத்தில் தங்கத் தானே வைக்கிறான்... என்ன பிரச்னைன்னா நான் இத்தனை நாள் உன் நிழல்லேயே இருந்துட்டேனா ஜானு, உன்னை விட்டு பிரியறதுன்னா மனசுக்கு ரொம்பவே கஷ்டமாய் இருக்குடி!''

கண்களில் பெருகிய நீரைக் காண்பிக்க விரும்பாமல் முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டாள் ஜானகி. அன்றிரவு அவளும், விசாலமும் உறங்கவில்லை. முதியோர் இல்ல வாழ்க்கையை எண்ணி விசாலம் பயந்து கொண்டிருந்தாள் என்றால், ஜானகியோ வேறு பல சிந்தனைகளில் இருந்தாள். மறுநாள் காலை சீக்கிரமாகவே சமையலை முடித்து வெளியே போன ஜானகி, மாலை மகனும், மருமகளும் வருவதற்கு சற்று முன் தான் வந்தாள்.

""ஏண்டி ஜானு இவ்வளவு நேரம்? எங்கே போயிட்டே? நான் என்னென்னவோ நினைச்சு பயந்தே போயிட்டேன்,'' என்ற விசாலத்தைப் பார்த்து அவள் புன்னகை செய்தாளே ஒழிய பதில் ஏதும் சொல்லவில்லை.

அன்று இரவு கீழே உட்கார்ந்து தங்கள் இருவருடைய துணிமணிகளையும் சூட்கேஸ்களில் அடுக்கிய ஜானகியை கட்டிலில் உட்கார்ந்திருந்த விசாலம் திகைப்புடன் பார்த்தாள்...

""என் துணிமணியை எடுத்து வைக்கிறது சரிதான்; உன்னோடதை ஏண்டி ஜானு எடுத்து வைக்கிற?''

""உங்களை விட்டுட்டு நான் எப்படி அத்தை தனியாய் இருப்பேன். சாப்பிட்டா, எனக்குத் தொண்டையில் சோறு இறங்குமா? அதனால, நாம ரெண்டு பேரும் சேர்ந்து தான் இங்கிருந்து போறோம்!''

""என்னடி சொல்றே ஜானு? நீயும் என் கூட முதியோர் இல்லத்துக்கு வர்றியா?''

""இல்லை அத்தை! நாம் முதியோர் இல்லத்துக்குப் போகப் போறதில்லை. நான் பழையபடி மெஸ் ஆரம்பிக்கப் போகிறேன். நாம ரெண்டு பேரும் நம்ம அந்தப் பழைய வீட்டுக்கே போகப் போகிறோம்!''

விசாலம் அதிர்ச்சியில் இருந்து மீள சிறிது நேரம் தேவைப்பட்டது. பின் அவள் கண்கள் கலங்க சொன்னாள்...

""ஜானு, என் ராசாத்தி, வேண்டாண்டி... எனக்காக நீ இந்தப் பைத்தியக்காரத்தனம் செஞ்சுடாதே. நான் உன்னை விட்டுப் போய் ரொம்ப நாள் இருக்க மாட்டேண்டி. சீக்கிரமே செத்துடுவேன்.

""என்னோட இந்தக் கொஞ்ச நாள் கஷ்டத்துக்காக நீ இந்த முடிவு எடுத்துடாதேடி... நீ, இது நாள் வரைக்கும் எனக்கு செஞ்சதுக்கே நான் ஏழு ஜென்மத்துக்கு உன் கால் செருப்பாய் இருந்தாக் கூட உன் கடன் தீர்க்க முடியாதுடிம்மா...''

மாமியாரின் காலடியில் வந்து உட்கார்ந்த ஜானகி பாசத்துடன் அவளைப் பார்த்தாள்...

""உங்களுக்காக நான் இந்த முடிவெடுத்தேன்னு யார் சொன்னது? அத்தை... எனக்கு இப்ப உழைக்கத் தெம்பிருக்கு. அதனால தான் என்னைக் கூட வச்சிருக்காங்க. ஒரு நாள் நானும், உங்க மாதிரி ஓய்ஞ்சுடுவேன். அப்போ, எனக்கும் முதியோர் இல்லம் தான் போக வேண்டி வரும்.

""அது புரிஞ்சு இப்ப நான் முழிச்சுகிட்டேன். அதான், இந்த முடிவு. நல்ல வேளையா, அந்த மெஸ் வீடு இப்ப காலியாத்தான் இருக்கு. நான் மெஸ் ஆரம்பிக்கப் போறேன்னு அங்கே சொன்னதும், சந்தோஷமா அந்தக் காலேஜ் வாத்தியாருங்க, பசங்க எல்லாம் சேர்ந்து பேசி அட்வான்ஸ் கூட கலெக்ட் பண்ணி என்கிட்ட கொடுத்துட்டாங்க.

""அத்தை... நமக்குப் பெரிய செலவில்லை! உடுக்க துணி, இருக்க கூரை, வயத்துக்கு சோறு இதைத் தவிர வேற என்ன வேணும்! சொல்லுங்க. மீதமாகிற காசை நான் சேர்த்து வைக்கப் போறேன். என் கடைசி காலத்தில் நான் முதியோர் இல்லம் போக வேண்டி வந்தாக் கூட என் சொந்தக் காசில் போய் இருக்க ஆசைப்படறேன்...''

""உன்னையெல்லாம் சதீஷ் அப்படிக் கை விட்டுட மாட்டான் ஜானு. அவன் நல்லவன்டி''

""சுயமாய் முடிவெடுக்கவும், செயல்படவும் முடியாதவங்க, நல்லவங்களா இருந்தாலும் பிரயோஜனம் இல்லை அத்தை!''

தாங்க முடியாத துக்கத்துடன் மருமகளை வெறித்துப் பார்த்தாள் விசாலம்.

""அத்தை... எல்லாத்துக்கும் மேல நாம நம்ம வீட்டில் சுதந்திரமாய் இருக்கலாம்; நீங்க சப்தமாய் பேசலாம். வெத்திலை, பாக்கு போடலாம்; லட்சுமி பாட்டியோட மணிக்கணக்கில் பேசலாம்!''

மருமகள் சொல்லச் சொல்ல, அவளைக் கட்டிக் கொண்டு நிறைய நேரம் அழுதாள் விசாலம். அதற்குப் பிறகு பேச அவளுக்கு வார்த்தைகள் இருக்கவில்லை.

மறுநாள் கால்டாக்சிக்குப் போன் செய்து விட்டு மகனிடம் தன் முடிவைச் சொன்னாள் ஜானகி.

அவன் எரிமலையாக வெடித்தான்...

""அம்மா, உனக்குப் பைத்தியம் பிடிச்சுடுச்சா? உனக்கென்ன இப்ப வேலை பார்க்கிற வயசா?''

""நான் இங்கே மட்டும் சும்மாவா உட்கார்ந்திருக்கேன்?''

""அம்மா நான் அந்த முதியோர் இல்லத்தில் பாட்டிக்காக அட்வான்ஸ் கூட கொடுத்துட்டேன்!''

தங்கள் சூட்கேஸ்களை எடுத்து டாக்சி டிரைவரிடம் கொடுத்து விட்டு மகனிடம் சொன்னாள் ஜானகி...

""அது வீணாப் போகாதுடா! அப்படியே வச்சிருக்கச் சொல்லு. 30 வருஷம் கழிச்சு நீங்க போறப்ப உபயோகமாகும்!''

""திடீர்ன்னு இப்படிக் கிளம்பினா எப்படி? நான் வேலைக்கு வேற ஆள் கூட ஏற்பாடு செய்யலை!'' என்றாள் சத்யா.

பதில் பேசவில்லை ஜானகி. அதிர்ச்சியிலிருந்து மீளாத மகனையும், திகைப்பில் ஆழ்ந்த மருமகளையும் பொருட்படுத்தாமல், தன் மாமியாரை கைத் தாங்கலாய் பிடித்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் ஜானகி. 

Monday 19 September 2011

விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 11





புகழின் உச்சாணிக் கொம்பில் ஊஞ்சல் கட்டி, ஆனந்தமாக ஆடியபடியே உலக நாடுகள் மத்தியில் தங்களை அலங்கோலமாக்கிய ஜூலியனுக்கு அமெரிக்கா கொடுத்த பதிலடி தான் ஸ்விடனைச் சேர்ந்த அன்னாவின் வழக்கு என்று பெரிதும் நம்பப்படுகிறது. காரணம் அன்னா ஏற்கனவே கியூபாவில் சில வருடங்கள் வசித்தவர். அங்கு பிடல் காஸ்ட்ரோவிற்கு எதிராக செயல்படும் ஒரு அமைப்பிற்கு உதவியதற்காக, கியூபாவை விட்டு துரத்தியடிக்கப்பட்டவர். அன்னா உதவிய அந்த அமைப்பிற்கான பொருளாதார வாய்க்கால் சி.ஐ.ஏ வின் பணப்பெட்டியில் சென்று முடிவது உபரித் தகவல். மேலும் வழக்குத் தொடர்ந்த சில மணி நேரங்களில் அன்னாவும், சோபியாவும் தாங்கள் ஜூலியனைச் சந்தித்து, உறவாடிய பொழுதுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட இணையப்பதிவுகள்( Facebook, twitter etc) அழித்து விட்டனர். 'அவர்கள் ஆட்சியில் திருடினார்களே, நாங்கள் என்றாவது கேட்டதுண்டா.. இன்று எங்களை மட்டும்.." என்று கலங்கியதும், இவனைக் குற்றம் சொல்வதற்கு அவன் யோக்கியமா என்ற நோக்கில் சிந்திக்க வைத்து, குற்றத்தை மறக்கடிக்கும் அதே காளிமார்க் பவண்டோ காலத்து தொழில்நுட்பம். ஜூலியனின் படுக்கையறைக்குள் மறைந்து கொள்ளப் பார்த்த அமெரிக்காவின் முயற்சி சிறிதளவுக்கே வெற்றி பெற்றது.


அமெரிக்காவின் துரத்தல், ஸ்விடன் மோகினிகளின் சட்டச்சிக்கல்கள் என்று கடும் நெருக்கடியில் ஜூலியன் இங்கிலாந்து வந்திறங்கியதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள், விரைவில் இணையத் தொழில்நுட்பத்தின் பாடங்களாக்கப் பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எத்தனை, எத்தனையோ போர்களையும், போராட்டங்களையும் கடந்து வந்த வரலாற்றின் பக்கங்களுக்கு முதல் முறையாக, புத்தம் புது ஈஸ்ட்மென் கலரில் கிடைத்த விஷயம் தான் ஜூலியனுக்கும், அமெரிக்காவிற்கும் நடந்த இணைய யுத்தம் (Cyber War). இந்த இணைய யுத்தத்தின் பார்வையாளர்களான பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் இது ஒரு விநோதமான அனுபவம். Encryption, Mirrored Sites, DDos, DNS Servers, Web Hosting போன்ற தொழிநுட்ப வார்த்தைகள் வெகுஜன ஊடகங்களில் சரளமாகப் புழங்கத் தொடங்கின.


ஒரு ஆதிக்கம் மிகுந்த நாட்டின் அரசாங்கம் நினைத்தால் சரியோ, தவறோ என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது குறித்தான செயல்முறை விளக்கமும், இணையத் தொழில்நுட்பத்தில் கரைகண்டவர்கள் நினைத்தால் ஒரு கணிணியையும், இணைய இணைப்பையும் வைத்துக் கொண்டு யாரையும் அலறியடித்து ஓட வைக்க முடியுமென்பதும் சிறப்புற நிகழ்த்திக் காட்டப்பட்டன. ஜூலியன் இங்கிலாந்திற்கு ஆறு மாத விசாவில் வருகை தந்திருக்கிறார் என்பது தான் தெரியுமே தவிர, அவர் எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒரு பக்கம் புதிது, புதிதாக அமெரிக்க வெளியுறவுத் துறை ஆவணங்கள் அனுதினமும் அம்பலமாகிக் கொண்டே இருந்தன. மறுபக்கம் ஸ்விடன் அரசு இண்டர்போல் அமைப்பை அணுகி தங்களிடம் ஒரு பிராது இருக்கிறதென்றும், அது குறித்தான பஞ்சாயத்துக்கு உடனே ஜூலியனை அழைத்து வருமாறும் கோரிக்கை விடுத்தது. இண்டர்போல் ஜூலியனைக் கண்டுபிடிக்க இங்கிலாந்து அரசை அணுகிய போது, ஆவணங்களில் ஜூலியனின் பெயர்க்குறிப்பில் எழுத்துப்பிழை இருப்பதைக் கண்டுபிடித்து சிலிர்த்துக் கொண்டு நிராகரித்து விட்டது. ஆவணங்களைத் திருப்பி ஸ்விடனிடம் கொண்டு போய் திருத்தி எழுதிக் கொண்டு வர இண்டர்பொல் அமைப்பிற்கு இரண்டு நாட்கள் பிடித்தன. இப்போது எல்லாம் இருக்கிறது ஆனால், ஜூலியனை எங்கே போய் பிடிப்பதென குழம்பினர். இந்த இடைவெளியை எதிர்பார்த்திருந்த அமெரிக்கா 'நாந்தான் இருக்கேன்ல' என்று களத்தில் குதித்தது.


பொதுவாக ஒரு இணையதளத்தின் பெயர் என்பது தனி விஷயம் (domain name), அந்த இணையத்தளத்திற்கானக் கோப்புகளை அல்லது தகவல்களை வைத்திருக்கும் கணிணி/வழங்கி என்பது தனி விஷயம் (hosting server). இந்த இரண்டையும் கோர்த்து விடும்போது தான் நீங்கள் உங்கள் உலாவியில்(browser) இணையதளத்தின் பெயரை உள்ளிட்டதும் அத்தளத்தின் தகவல்களைப் பார்க்க முடிகிறது. உலகில் உள்ள ஒவ்வொரு இணையதளத்தின் பெயரும் அதன் கோப்புகளைக் கொண்ட வழங்கி பற்றிய தகவலும் சேமிக்கப்பட்டிருக்கும் இடம் தான் இணையதளப் பெயர் வழங்கி (DNS - Domain Name Servers). . கடந்த மூன்று வருடங்களாக ஜூலியன் அமைத்திருந்த உலகளாவிய விக்கிலீக்ஸ் ஆர்வலர்களின் வலையமைப்பினையும், அவர்களின் எண்ணிக்கையையும், பலத்தையும் குறைத்து மதிப்பிட்டு, எல்லாமே ஜூலியன் ஒரு ஆள் தான் என்று நினைத்த அமெரிக்க அரசாங்கம் முதல் முறையாக நேரிடையாக, உலக மக்கள் அனைவரையும் சாட்சியாக வைத்துக் கொண்டு தனது அதிகாரங்களை ஜூலியனை நோக்கி பிரயோகித்து, விக்கிலீக்ஸ் எனும் தேன்கூட்டில் கை வைத்தது.

விக்கிலீக்ஸ் தளத்திற்கென்று உலகெங்கும் பல நிறுவனங்களிடமும் கோப்புகளை சேமித்து வைத்து தங்கள் இணைய தளத்திற்கு வழங்குவதற்கு ஏதுவாக வழங்கி சேவைகளை (hosting servers) பெற்றிருந்தார்கள். அதன் மூலம் ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்கள் நாட்டிலுள்ள வழங்கிகள் மூலமே விக்கிலீக்ஸ் தளத்தினை எளிதாக, விரைவாக பார்வையிட முடியும். விக்கிலீக்ஸ் தளத்தில் முக்கிய ஆவணங்களை வெளியிடும் ஒவ்வொரு முறையும் இது போன்ற சில ஏற்பாடுகள் செய்து வைக்கப்படும். முதல் காரணம், ஒரு இடத்தில் தளம் முடக்கப்பட்டால் மறு இடத்தில் வேலை செய்யும். இரண்டாவது, கூட்டம் கும்மும்போது இணையப் போக்குவரத்து அதிகமாகி தளம் செயல்பட முடியாமல் போக வாய்ப்பிருப்பதால் இணையப்போக்குவரத்தினை பல்வேறு கோப்பு வழங்கிகளுக்கும் பிரித்தனுப்பி சமாளிக்க முடியும்.


இதற்குள் அமெரிக்காவின் அரசியல்வாதிகள் விக்கிலீக்ஸ் தளத்தினை அல்-குவைதா, பின் லேடன் அளவிற்கு அமெரிக்காவிற்கான அச்சுறுத்தல், அமெரிக்காவின் மீதான இணையத் தாக்குதல் என்றெல்லாம் குரலெழுப்பி கிட்டத்தட்ட விக்கிலீக்ஸ் தளத்தினைப் பார்க்காமலும், ஆதரிக்காமலும் இருப்பது தான் தேசபக்தியின் அடையாளம் என்கிற அளவுக்கு பிரச்சாரம் செய்து தங்கள் முகங்களை ஊடகங்களில் காண்பித்து மகிழ்ந்தார்கள். இதையே வாதமாக வைத்து அமெரிக்க அரசாங்கத்தின் நெருக்கடியால் விக்கிலீக்ஸ் தள்த்திற்கான அனைத்து DNS சேவைகளும் முடக்கப்பட்டன, உலகப் புகழ்பெற்ற அமேசான் (Amazon.com) நிறுவனம் விக்கிலீக்ஸ் தளத்திற்காக தாங்கள் வழங்கி வந்த கோப்பு வழங்கிகளுக்கான(hosting server) சேவையினை நிறுத்தியது. இனி யாரும் விக்கிலீக்ஸ் தளத்தினைப் பார்க்க முடியாது என்று நினைத்து சரக்கடித்து கொண்டாட எத்தனிக்கும் முன்னரே தங்கள் தளத்தினை 30க்கும் மேற்பட்ட வெவ்வெறு புதிய இணையதள முகவரிகள் மூலம் பார்க்கலாம் என்று விக்கிலீக்ஸ் சார்பில் டிவிட்டரில் தெரிவிக்கப் பட்டது. 30 முகவரிகள், நூறாகி, நானூறாகி, இன்றைய தேதியில் ஐநூறுக்கும் மேலான இணைய தள முகவரிகளின் மூலம் விக்கிலீக்ஸ் தளத்தினைப் பார்வையிடும் வண்ணம் ஏற்பாடுகள் களைகட்டிய வேகத்தினைப் பார்த்து அமெரிக்கா திகைத்துப் போனது.

ஊரெல்லாம் ஊடக சுதந்திரத்திற்கு ஊர்வலம் போகும் அமெரிக்காவில் ஒரு ஊடக நிறுவனம் (அமேசான்) எவ்வாறெல்லாம் கட்டுப்படுத்தப்படலாம் என்பதை உலகுக்குக் காட்டவே அந்நிறுவனத்திடம் வழங்கிச் சேவையினைப் பெற்றிருந்தோம் என்று ஜூலியன் அலட்சியமாக சொல்லி வைக்க, அமெரிக்காவின் இரத்த அழுத்தம் மேலும் எகிறியது.

ஒரே நேரத்தில் இத்தனை முகவரிகளில்(mirrored sites) எப்படி விக்கிலீக்ஸ் தளம் விரைவாக செயல்பாட்டுக்கு வந்தது, அமெரிக்காவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், ஜூலியனின் கைது, கைதுக்கு எதிரான போராட்டங்கள், பின் பிணையில் வெளிவந்தது ஆகியவை அடுத்தப் பகுதியில்.

எங்கெல்லாம் ஆவணங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் உண்மைகள் மறைக்கப்பட்டு, மாற்றங்கள் தடுக்கப்படுகின்றன - ஜூலியன்